கீரைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன்படி ‘அதிக பலன் தரும் 10’ கீரைகள் என்ற பெயரில் சில கீரைகளை வரிசைப்படுத்தி அவற்றின் பலன்களை இங்கே தொகுத்துள்ளோம். படித்து பயன்பெற கேட்டுக் கொள்கிறோம்.
 


1. அகத்திக்கீரை:
இக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் ஏராளமாக இருப்பதால் இது உடலுக்கு பலம் தரக்கூடியது. எலும்பு பலம் பெற்று வளரவும், அதன் காரணமாக உடல் வளர்ச்சி பெறவும் சுண்ணாம்புச்சத்து நமது உடலுக்கு தேவைப்படுகிறது. எனவே, அடிக்கடி அகத்திக்கீரையை சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து கிடைக்கும்.
பொதுவாக அகத்திக்கீரையை சாம்பார், பருப்புக்குழம்பு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம். வயோதிக காலத்தில் இடுப்பு எலும்பு பலமிழந்து முன்பக்கமாக உடல் சாய்ந்த நிலையிலும் சிலருக்கு இடுப்பு எலும்பு பின்பக்கமாக வளைந்தும் காணப்படும். இதை ஆங்கில மருத்துவத்தில் (அலோபதி) ‘ஆஸ்டியோ மலாசியா’ என்பார்கள். நமது வாழ்நாளில் அகத்திக்கீரையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இத்தகைய தொந்தரவுகளுக்கு ஆளாக வேண்டியிராது.
அகத்திக்கீரை வாயுவை உண்டு பண்ணக்கூடியதாக இருந்தாலும் இத்துடன் பெருங்காயம், பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாயு அகன்றுவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் அடிக்கடி உணவில் அகத்திக்கீரை சேர்த்துவந்தால் பிரச்சினையின்றி மலம் கழியும்.
2. அரைக்கீரை:
அரைக்கீரையின் சக்தி இவ்வளவு தான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. பொதுவாக எல்லாவிதமான வியாதிகளையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது அரைக்கீரை. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் இக்கீரையுடன் வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து சுடுசோற்றுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறும். அந்த ரத்தத்தில் புதிய தாது அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். குறிப்பாக ஆண்களுக்கு தேவையான முக்கியமான தாதுக்கள் கிடைக்கும். இதன் காரணமாக உடலுறவின் போது நீடித்த இன்பம் கிடைக்கும். அரைக்கீரையில் இவ்வளவு எளிதாக சக்தி கிடைக்கும்போது லேகியங்கள், மாத்திரைகளை தேடி ஏன் ஓட வேண்டும்?
வாலிப வயதின்போது இச்சையை அடக்கமுடியாமல் சக்தியை வீணடிப்பவர்கள் நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுவார்கள். உடல் பலமிழந்து சோம்பலாக காணப்படுவார்கள். சிலருக்கு கண்பார்வை மங்கி மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு அரைக்கீரை நல்லதொரு வரப்பிரசாதம்.
சிலருக்கு வாயு அதிகமாக உற்பத்தியாகி ரத்தத்துடன் கலந்து பல்வேறு தொந்தரவுகள் தரும். அதாவது நெஞ்சுவலி, வயிற்றுவலி, கை கால் வலி, மூட்டுவலி வரும். இவற்றையெல்லாம் மருந்தாக இருந்து குணப்படுத்தக்கூடியது அரைக்கீரை.
3. முளைக்கீரை:
முளைக்கீரையில் உடல் ஊட்டத்திற்கு தேவையான புரதச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கின்றன. வைட்டமின் ஏ, பி ஆகிய உயிர்ச்சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன. பலவீனமான உடலை தேற்றுவதுடன் பசியை தூண்டி ஜீரண சக்தியை கொடுக்கும். உணவில் அதிகமாக சேர்த்து வந்தால் தோல் வியாதிகளான சொறி, சிரங்கு போன்றவை அணுகாது.
இதுதவிர, மூக்கு சம்பந்தமான நோய்களை மருந்தாக இருந்து குணப்படுத்தும். எலும்பு வளர்ச்சி பெறாதவர்கள் நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுகிறவர்களுக்கு முளைக்கீரை நல்ல மருந்து. இக்கீரை குளிர்ச்சியானது. எனவே எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் இக்கீரையை தவிர்க்கவும்.
4. பொன்னாங்கண்ணிக்கீரை:
இக்கீரையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் வலு சேரும். ரத்த ஓட்டம் பெருகும். இரும்புச் சத்துடன், புரோட்டின் சத்தும் இந்த கீரையில் இருப்பதால் ரத்தம் சுத்தமடையும். இதயம் வலிமையடையும். பொன்னாங்கண்ணிக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து சமநிலையில் வைக்கும்.
கண் சம்பந்தமான கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் இந்த கீரையை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பூரண குணம் கிடைக்கும்.
இந்த கீரையை தேங்காய் சேர்த்து நெய்யில் பொரியல் செய்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாதுபுஷ்டி கிடைக்கும். பொன்னாங்கண்ணியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களது தேகம் பொன்னிறமாகும். இந்த கீரையை உப்பில்லாமல் வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்நோய்கள் குணமாகும்.
5. முருங்கைக்கீரை:
முருங்கைக்கீரையில் நிறைய வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால் அது உடலை நன்றாக வளரச்செய்யும். மற்ற எந்தவகை கீரைகளிலும் இல்லாத அளவு வைட்டமின் ஏ, பி, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைய இருக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆயுள் கூடுவதோடு வயதான காலத்தில் தோல் சுருங்கிப்போகாமல் வழவழப்புடன் காணப்படும். நரம்புகள் முறுக்கேறி காணப்படும்.
எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல பலத்தைத் தரக்கூடியது. கண் சம்பந்தமான கோளாறுகள் பித்த சம்பந்தமான வியாதிகள், சிரசு (தலை) சம்பந்தமான வியாதிகள் போன்றவற்றை முருங்கைக்கீரை பூரணமாகக் குணப்படுத்தும் சக்தி படைத்தது.
முருங்கைக்கீரையை பருப்பு சேர்த்து கூட்டு வைப்பார்கள். சிலர் பொரியல், துவட்டல் செய்து சாப்பிடுவார்கள். இந்தக் கீரையுடன் கோழி முட்டையை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுவதால் உடல் நலம் பெறும். ரத்த விருத்திக்கு இந்த கீரை நல்லது. தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும்.
6. கொத்துமல்லிக்கீரை:
கொத்துமல்லிக்கீரையில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்து, 1970 முதல் 3580 மில்லி கிராம் வரை இருக்கிறது. இது வளரும் இடத்தைப் பொறுத்து உயிர்ச்சத்தின் அளவு வேறுபடும். இது தவிர வைட்டமின்கள் பி, சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன.
சிறுவயது முதல் இக்கீரையை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆயுள்வரை கண்பார்வை மங்காது. சொறி, சிரங்கு, புண் போன்றவற்றை குணமாக்கும் வல்லமை உண்டு.
கொத்துமல்லிக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு புதிய ரத்தம் உண்டாகும். இதன் காரணமாக தாது விருத்தியடையும். சைனஸ், மூக்கடைப்பு, மூக்கில் புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற கோளாறுகளால் கஷ்டப்படுகிறவர்கள் கொத்துமல்லிக்கீரை துவையலை கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உள்ளுதடு, நாக்கு, உள் கண்ணம் போன்றவற்றில் சிலருக்கு புண் வரும் அவர்கள் கொத்துமல்லிக்கீரையுடன் துவரம்பருப்பு, தேங்காய் சேர்த்து கடையல் செய்து சாப்பிட்டால் அதன் பலனை அடையலாம்.
7. புதினாக்கீரை:
புதினாக்கீரையில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்றவை இருக்கிறது. புதினாக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
சிறு குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு வந்தால் புதினாவை சட்டியில் போட்டு நன்றாக வதக்கி பின்பும் நீர்விட்டு கொதிக்க வைத்து அதன் சாறை காலை, மதியம், மாலை என மூன்றுவேளை கொடுத்துவந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதய தொந்தரவுகளால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன்படி செய்யலாம், உடனடி நல்ல குணம் கிடைக்கும். மேலும் புதினாவை கஷாயமாகவோ, சூப்பாகவோ செய்து அருந்தி வந்தால் இருதயம் தொடர்பான நோயிலிருந்து விடுதலை பெறலாம். புதினாவை வெயிலில் காயவைத்து தேவையான அளவு கல் உப்பு சேர்த்து பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
8. மணத்தக்காளிக்கீரை:
மணத்தக்காளிக்கீரையில் புரதச்சத்தும், இரும்புச்சத்தும் அதிக அளவில் உள்ளன. இந்தக்கீரையை பச்சைப்பயறுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய் மற்றும் குடலில் உண்டாகும் புண்கள் குணமாகும்.
இந்த கீரையை வாயில் போட்டு மென்று வந்தாலும் கூட வாய்ப்புண், வயிற்றுப்புண்கள் குணமாகும். இந்தக்கீரை குளிர்ச்சியானது என்றாலும் ஜலதோஷம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே கீரையை சூப் செய்து சூட்டோடு அருந்தி வந்தால் அதிலிருந்து விடுதலை பெறலாம்.
இதே சூப்பை அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். உடல் சூடு தளர்வதோடு இத்ய பலவீனங்களை போக்கி நல்ல வலுவூட்டும்.
9. பசலைக்கீரை:
பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, பி1, பி2, சி போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. சுண்ணாம்பு மற்றும் புரதச்சத்துக்கள் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக்கீரை நல்ல பலனளிக்கும். பொதுவாக பசலைக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதோடு உடல் உஷ்ணத்தை தணிக்கும். பலச்சிக்கலை போக்கும்.
இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாந்தி, நீரடைப்பு, ஈரல் உபாதைகள் போன்றவற்றில் இருந்து விடுதலை பெறலாம். பசு வெண்ணெயுடன் சேர்த்து பசலைக்கீரையை அரைத்து தடவி வந்தால் குழந்தைகளுக்கு வரும் அக்கி நோய் ஆறிவிடும்.
10. தூதுவளைக்கீரை:
தூதுவளைக்கீரை உஷ்ணத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பெரும்பாலும் இந்தக் கீரையை யாரும் பயன்படுத்துவதில்லை.
இக்கீரையை துவையல் செய்து சாப்பிடலாம். மழை மற்றும் பனி காலங்களில் குளிர்ச்சியான பதார்த்தங்களை சாப்பிடுவதால் இளைப்பு நோய் வந்து பாடாய் படுத்தும். மூச்சு இழுத்துவிடக்கூட மிகுந்த சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தூதுவேளைக்கீரை நல்ல நிவாரணம் தரும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இக்கீரையை உணவில் சில நாட்கள் மட்டும் தவறாமல் சேர்த்து வந்தால் நல்ல நிவாரணம் தரும். அதாவது காய்ச்சல் மூலம் ஏற்படக்கூடிய செவிட்டுத்தன்மை, காது இரைச்சல், காதில் சீழ்வருதல், உடம்பில் நமைச்சச்ல், எரிச்சல், அஜீரணக்கோளாறு, உடல்பலவீனம் போன்றவை வராமல் தடுக்கும்.
தூதுவளைக்கீரையை பசு வெண்ணெயுடன் சேர்த்து நெய்யாக உருக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் இருமல், சளி தொந்தரவுகள் குணமாகும்.
தகவல் டாக்டர் பெல்சின்
நன்றி : http://www.aambal.co.uk