ஞாயிறு, மார்ச் 04, 2012

வேண்டாம் ஆபாசம்.

அதிக அளவில் வெளியாகும் ஆபாசப் படங்கள் : நடவடிக்கை என்ன?









தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு புறம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், மறுபுறம் அதில் உள்ள நன்மையல்லாத விஷயங்கள், இளைய தலைமுறையினரை சீரழித்து வருகின்றன.மொபைல்போனில் உள்ள கேமரா, புளூ டூத் உள்ளிட்ட வசதிகள், தற்போது இளைஞர்களில் சிலரை குற்றவாளிகளாக்கியுள்ளன. சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளியில் ஒரு மாணவியை ஆபாசப் படம் எடுத்தது, அந்த மாணவியின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றது.





அதே போல், மதுரையில் ஒரு இளைஞர் தன் காதலியுடன் நெருக்கமாக இருந்ததை, ஆபாசப் படம் எடுத்து, அதை வைத்து மிரட்டி, அப்பெண்ணை தன் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும், சென்னை பல்லாவரத்தில், நான்கைந்து கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஒரு இளம்பெண்ணை சீரழித்த விவகாரமும், இந்த வரிசையில் நடந்தது தான். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம், தற்போது வெளிவரும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.முன்பெல்லாம் ஆபாசப் படங்கள் என்பது, ஒன்றிரண்டு எப்போதாவது தான் வெளிவரும். அவை, குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படும். அவற்றை, 18 வயதுக்கு குறைந்தவர்கள் பார்ப்பதற்கு அனுமதியில்லை.ஆனால், மொபைல்போன், இன்டர்நெட் வந்துவிட்ட பின், இப்படங்களை பார்ப்பதற்கு, வயது வரம்பு என்பது இல்லாமல் போய்விட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, வீட்டில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் வசதியை, வசதியான பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். விளைவு, அவர்களை பாடத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள்ளச் செய்கிறது.

இது தவிர, மொபைல்போனில் உள்ள மெமரி கார்டு வசதியை பயன்படுத்தி, சில சமூக விரோத கும்பல்கள், ஆபாசப் படங்களை அவற்றில் பதிவு செய்து கொடுக்கின்றனர்.
இவற்றை, பள்ளி மாணவர்கள் கூட தங்கள் மொபைல்போனில் வைத்திருப்பதை, தற்போது பார்க்க முடிகிறது. விளைவு, அடிக்கடி பார்க்கப்படும் இந்த ஆபாசப் படங்களை, ஒரு கட்டத்தில், நிஜத்தில் நடத்திப் பார்க்க முடிவெடுக்கின்றனர். இது போன்று நடந்தது தான், கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவி மற்றும் பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்திய, "கேங்க் ரேப்' சம்பவங்கள்.மொபைல்போனில், சிலர் தனக்கு மட்டுமே என வைத்திருக்கும் ஆபாசப் படங்கள் கூட, தற்போது வெளியானதற்குக் காரணமும் உண்டு. அவர்கள் மொபைல்போனை ஏதாவது பிரச்னை என்று பழுது பார்க்கக் கொடுக்கும் போது, பழுது பார்க்கும் பணியில் இருப்போர், "ரெகவரி சாப்ட்வேர்' மூலம், அதில் பதிந்திருக்கும் படங்களை எடுத்து விடுகின்றனர்.அப்படி வெளியானது தான், தேவநாதன் என்ற அர்ச்சகரின் ஆபாசப் படங்கள். அதன் பின் தான், அதுதொடர்பான புகாரே வந்தது.

இந்த வீடியோ பதிவுகள், தற்போது வரை இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வீடியோ பதிவுகள் என பதிவு செய்து காத்திருந்தால், ஒரு வெப்சைட்டில், 300க்கும் அதிகமான வீடியோ பதிவுகள், தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி என, வகை வகையாக வந்து கொட்டுகின்றன. இவற்றிற்கு மிகவும் கீழ்த்தரமான விளக்கங்கள் வேறு கொடுத்திருக்கின்றனர். பெரும்பாலும், இதில், பெண்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அதிகம். அதுவும், மொபைல்போன் கேமராவில் பதிவானவை, 80 சதவீதம் இருக்கும். இதுபோன்ற பதிவுகளால், திரைமறைவு விஷயங்கள் பல, தெருவிற்கு வந்துள்ளன. அதே நேரத்தில், அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.இதுபோன்ற விஷயத்தில், தடுப்பது என்பது மிகவும் கஷ்டம் என்கிறது, சைபர் கிரைம் போலீஸ். "ஆபாச வீடியோ பதிவுகளை, மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுதல், ஆபாசப் படம் எடுப்பது உள்ளிட்ட புகார்கள் மீது மட்டுமே, நம்மால் இப்போதைக்கு நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தரமுடியும்' என்கிறார், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர்.

அவர் மேலும் கூறியதாவது:இணையதளங்களில், ஆபாசப் படங்களை பார்ப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள், தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும், ஏன் உலகத்திற்கே இந்த பிரச்னை உண்டு. இங்கு எடுக்கப்படும் படங்களை, உலகம் முழுமைக்கும் பார்ப்பதற்கான வசதி உள்ளது.ஒரு வெப்சைட்டில் வெளியிடப்படும் படங்களை, நாம் தடை செய்தால், அதே படங்கள் வேறு பெயரில், அடுத்த சில மணி நேரத்தில் வந்துவிடும். காரணம், இந்த படங்களை வெளியிடும் சர்வர்கள், இந்தியாவில் இல்லை என்பது தான்.நம் நாட்டு தொழில்நுட்பம் தொடர்பான, சைபர் கிரைம் சட்டம் வேறு; படங்களை வெளியிடும் சர்வர்கள் உள்ள நாடுகளின் சட்டம் வேறு. அந்த நாடுகளில், இது குற்றமாக இல்லை. அதே நேரத்தில், ஆபாசப் படங்களை மொபைல்போனில் வைத்திருத்தல், அவற்றை பகிர்ந்து கொள்ளுதல், ஆபாசப் படங்களை எடுத்தல் போன்றவற்றிற்கு, தொழில்நுட்ப சட்டப்பிரிவு, 67ன் கீழ், முதல் முறை தவறு செய்தால் மூன்றாண்டு சிறையும், ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அடுத்த முறையும் அதே தவறு செய்து பிடிபட்டால், ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் சிறையும் விதிக்கப்படும். பெண்களை வற்புறுத்தியோ, அவர்களை மயங்க வைத்தோ, ஆபாசப் படங்களை எடுப்போர் மீது, பெண் வன்கொடுமை, தொழில்நுட்ப குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால், இன்டர்நெட் விஷயத்தில், இது போன்ற படங்களை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும், சர்வதேச அளவில், பொதுவான சட்டம் வரவேண்டும்.இவ்வாறு சுதாகர் கூறினார்.

நன்றி  : தினமலர்

by



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக