வியாழன், ஆகஸ்ட் 30, 2012

10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த ஆறுதல் நீதி .

10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த ஆறுதல்  நீதி .








குஜராத்தில் 97 பேரை பலிகொண்ட இனப்படுகொலை வழக்கில், முன்னாள் பெண் மந்திரி உள்பட 32 பேர் குற்றவாளிகள் என தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இனப்படுகொலை


குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம் நடந்தது. ஏராளமான கரசேவகர்களைப் பலிகொண்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இனக்கலவரங்கள் மூண்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதில் ஒன்றுதான், நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கு. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கோத்ரா ரெயில் எரிப்பு நடந்த மறுநாளில், (2002, பிப்ரவரி 28-ந் தேதி) நடந்தது. அன்றைய தினம், குஜராத்தில் விசுவ இந்து பரிஷத் முழு அடைப்பு நடத்தியது. அப்போது நரோடா பாட்டியா என்ற இடத்தில் இனக்கலவரம் வெடித்தது. இதில் சிறுபான்மை இனத்தவர்கள் 97 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னாள் பெண் மந்திரி

குஜராத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாநில முன்னாள் பெண் மந்திரியும், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வுமான மாயா கொட்னானி, பஜ்ரங்தளத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங்கி உள்பட 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் நெருங்கிய கூட்டாளி என்று கருதப்படுகிற கொட்னானி, கடந்த 2009-ம் ஆண்டு மந்திரியாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

61 பேர் மீது விசாரணை

முதலில் இந்த வழக்கில் 46 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை 2008-ம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சுப்ரீம் கோர்ட்டு ஒப்படைத்த பின்னர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் சாட்சி விசாரணை தொடங்குவதற்கு முன்பாக 6 பேர் இறந்து விட்டனர். சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு ஒருவர் இறந்து விட்டார். 2 பேர் ஜாமீனில் விடுதலையாகி பின்னர் தலைமறைவாகி விட்டனர். இன்றுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே 61 பேர் மீதான விசாரணை ஆமதாபாத் தனிக்கோர்ட்டில், கூடுதல் செசன்சு நீதிபதி ஜோத்ஸ்னா யாக்னிக் முன்னிலையில் நடந்துவந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கண்கண்ட சாட்சிகள் உள்பட மொத்தம் 327 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

32 பேர் குற்றவாளிகள்

விசாரணை முடிந்து, ஆகஸ்டு 29-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஜோத்ஸ்னா தனது தீர்ப்பினை வழங்கினார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் முன்னாள் பெண் மந்திரி மாயா கொட்னானி, பஜ்ரங்தளத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங்கி உள்பட 32 பேர் குற்றவாளிகள், அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 120(பி) (குற்றச்சதி), 302 (கொலை)படி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என நீதிபதி அறிவித்தார்.

மற்ற 29 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ஜோத்ஸ்னா விடுதலை செய்து உத்தரவிட்டார்.

தண்டனை விவரம் எப்போது?

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 32 பேர் மீதான தண்டனை குறித்து நேற்று வாதம் நடைபெற்றது. அரசு தரப்பில் வாதாடிய சிறப்பு அரசு வக்கீல் அகில் தேசாய், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். கோர்ட்டு கருணை காட்டவிரும்பினால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வக்கீல் நிரஞ்சன் டிக்கானி, குற்றவாளிகளின் குடும்பச்சூழல், பொருளாதாரப்பின்னணி ஆகியவற்றைக் கோர்ட்டு கருத்தில் கொண்டு, அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து 32 பேர் மீதான தண்டனை விவரம் ஆகஸ்டு 31-ந் தேதி (நாளை) அறிவிக்கப்படும் என நீதிபதி ஜோத்ஸ்னா கூறினார்.

நன்றி.
 தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக